தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விக்கிரவாண்டி நாங்குநேரிஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சரும் விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த சில நாட்களாக அங்கு தங்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அப்பகுதி பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் மனுக்கள் அளிக்க முடிவு செய்து அவரை சந்திக்க ஜமாத் உறுப்பினர்களுடன் சென்றுள்ளனர். அப்போது ஜமாத்தாரிடம்“உங்களுக்கு நாங்க எதுக்கு செய்யனும் நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்களே நீங்களும் ஓட்டுபோடமாட்டீங்க,கிறிஸ்டியனும் ஓட்டு போட மாட்டான். ஜமாத் மூலமா பேசிதானே வச்சுருக்கீங்க,அதே மாதிரி எல்லா பிஷப்பும் பேசிதானே வாச்சிருக்கான்,பாஜக கூட மோடி கூட கூட்டணி வச்சா என்னமோ மோடி வந்துதான் தமிழ்நாட்ட ஆட்சி செய்ற மாதிரிலா நீங் கஎல்லாரும் பேசுறீங்க. எடப்பாடி தான் ஆட்சி செய்ய போறாரு. இனிமே எல்லாரும் முஸ்லிம் ஜமாத்துன்னு பேர திமுக ஜமாத்துனு மாத்திருங்க.இப்படி செஞ்சிக்கிட்டே இருந்தீங்கன்னா காஷ்மீர்ல பன்னுன மாதிரி ஒதுக்கி வக்கிற நிலைமை வந்துரும்.என்கிட்ட மனுலாம் தரக்கூடாது.நான் வாங்கமாட்டேன். வேணும்னா லோக்கல்ல இருக்குற எம்.பி.ஞான திரவியத்திடம் போய் கொடுங்க." என்று பேசி ஜமாத்தினரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவமதித்து அனுப்பியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவர் சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அமைச்சராக பதவியேற்று கொள்ளும் போதும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம் என்று உறுதி மொழி ஏற்கும் அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி ஏற்றுள்ளார்.
தற்போது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதோடு இஸ்லாமிய கிறிஸ்துவச முதாய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் இல்லையென்றால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக இஸ்லாமிய கிறிஸ்துவ அமைப்புகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறு பேச்சு பதவியை ராஜினாமா செய்யவேண்டும் –தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்